வீராணம் ஏரியின் கதை

Tuesday 11 May 2010  at May 11, 2010;
மகாபலிபுரம் சுற்றுலா போகும் முன்பு கல்கியின் சிவகாமி சபதம் படித்துவிட்டு போனதாக என்னுடைய நண்பர் சொன்னது எனக்கு ஆச்சரியாமாக இருந்தது. கல்கி பற்றி நான் முன்பே  அறிந்துயிருந்தாலும் அவருடைய எழுத்து எனக்கு பரிச்சயமில்லை. நாவல்கள் கதைகள் படிப்பதில் எனக்கு விருப்பமில்லை, நம்முடைய வாழ்க்கையை ஒரு விறுவிறுப்பான நாவல் போல  இருக்கும்போது கற்பனா கதைகள் எதற்கு என்று அப்பழக்கத்தையே விட்டுவிட்டேன். வைரமுத்து இதற்கு விதிவிலக்கு;)

காட்டுமன்னார்கோயிலை பற்றி prtraveller.blogspot.com ப்ளாக்கில் வந்த நம்மூரின் கோயில் வரலாறு, வீராணம் ஏரி மற்றும் சோழர்களின் வரலாறு கல்கியின் பொன்னியின் செல்வனை படிக்க தூண்டியது. மணல்மேட்டில் பிறந்த ஒருவருக்கு காவிரியும் சோழர்களும் புதிதில்லை. மூன்றைரை வருடங்கள் கல்கியில் வந்த இந்த 2400 பக்கங்களில் 150 பக்கங்களை படித்தபோது, செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் எடுத்தது கூட பொன்னியின் செல்வன் பாதிப்பாக இருக்குமோ என எண்ண தோன்றியது. வீராணம்  ஏரியை கடக்கும்போது இதை உருவாக்கிய ராஜேந்திர சோழன் உண்மையிலேயே பெரிய ஆள்தான் என நினைத்தேன். ஆனால் அதை கட்டியது மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜதித்தர் என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரியும். கல்கியின் இலக்கியம் கூறுவது இதைதான்

விஜயாலய சோழனின் பேரரான முதற் பராந்தக சோழன் மதுரையும், ஈழமும் ொண்ட  கோப்பரகேசரி என்று பட்டம் பெற்றவன். சோழ பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன் அவனே. தில்லை சிற்றம்பலத்துக்கு அவன் பொன் கூரை வேய்ந்து சரித்திர புகழ்பெற்றவன். சோழசிகாமணி, சூரசிகாமணி, முதலிய பல விருதுப் பெயர்களோடு வீரநாராயணண் என்னும் பெயரையும் அவன் கொண்டிருந்தான்.

பராந்தகனுடைய காலத்தில் வடக்கே இரட்டை மண்டலத்து ராஷ்டிரகூட மன்னர்கள் வலிமை பெற்று விளங்கினார்கள். மானிய கேடத்திலிருந்து அவர்கள் படையெடுத்து வர கூடுமென்று பராந்தகன் எதிர்பார்த்தான். எனவே, தனது முதற்புதல்வனாகிய இளவரசன் இராஜதித்தனை ஒரு சைன்யத்துடன் திருமுனைப்பாடி நாட்டில் இருக்க செய்தான். அந்த சைன்யத்தை சேர்ந்த லட்சகணக்கான வீரர்கள் வேலையின்றி சும்மா இருக்க நேர்ந்த காலத்தில் இராஜதித்தன் ஒரு யோசனை செய்தான். குடிமக்களுக்கு உபயோகமான ஒரு பெறும் பணியை அவர்களை கொண்டு செய்விக்க எண்ணினான். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்ட பெருநதியின் வழியாக அளவில்லாத வெள்ள நீர் ஓடி வீணே கடலில் கலந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பகுதியை ஒரு பயன்படுத்த எண்ணி தன் வசமிருந்த வீரர்களை கொண்டு கடல் போன்ற விசாலமான ஏரி ஒன்றை அமைத்தான். அதை தன் அருமை தந்தையின் பெயரால் வீரநாராயண
ஏரி என்று அழைத்தான். பிற்காலத்தில் தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முண்ணணியில் யானை மீது ஏறி சென்று போரிட்டு பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கி உயிர் நீத்த அந்த மாபெரும் வீரன் 'யானை மேல் துஞ்சிய தேவர்' என பெயர் பெற்றான்.
(நன்றி கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் அதை பதிவிறக்கம் செய்ய உதவிய www.projectmadurai.org)

74  கணவாய்கள், 16 கிலோமீட்டர் நீளம், 4 கிமீ அகலம் கொண்ட ஏரி 1011 யிலிருந்து 1037 யில் கட்டப்பட்டது. NLC விரையமாக்கும் நீர் ஆறு போல ஓடுவது ஒரு பக்கம், 1000 கோடி செலவு செய்து 45 ஆழ்குணாய் மூலம் 180 மில்லியன் லிட்டர் தினமும் உறிஞ்சப்படுவது இன்னொரு பக்கம் என நம் நீர் ஆதாரம் இன்று தொலைத்து கொண்டு இருக்கிறோம். நீரோட்டம் அதிகரிக்க வடவாற்றில் போடப்பட்ட சிமெண்ட தளங்களால் நம்முடைய குடிநீர் போர்வெல்கள் இன்று ஆழமாக இறக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். 47 அடி ஆழத்தை இன்னும் ஒரு அடி கூட நம்மால் தோண்ட முடியாமல் இருக்கும்போது, நம் எதிர்கால சந்ததினருக்கு அது ஒரு தரைவெளி ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நெல்லாடிய நிலமெங்கே, சொல்லாடிய அவை எங்கே என ஆயிரத்தில் ஒருவனாய் கேட்கும் முன்பே இளங்கீரனும், மஞ்சை வசந்தனும், அறிவுமதியும், கண்ணன் பிள்ளையும் விழித்தால் சரி.

No comments:

Post a Comment