மின்சார சிக்கனம் தேவை இக்கணம்

Friday, February 17, 2012  at 12:22 PM;

மின்சார தட்டுபாடு குறைக்க மின்வெட்டை அமல்படுத்தினால், நம் மக்கள் இன்வெர்ட்டரகளை உபயோகிக்க தொடங்குகிறார்கள். இதனால் மின்வெட்டால் பிரயோஜனம் இல்லை என்ற செய்தி காண கிடைத்தது. தொழில்சாலைகளுக்கு அதிகாரபூர்வமான விடுமுறை அளிக்க சொல்லலாமா என தமிழக அரசு ஆலோசிப்பதாக வரும் செய்திகள் மின்தட்டுபாடு கையை மீறி போய்விட்டதோ என அஞ்சதோன்றுகிறது.
குறுந்தொழில் புரிவோர், பொது தேர்வை எதிர்நோக்கியுள்ள 12 ம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலம் மின்வெட்டால் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலையில், நாம் குறிப்பாக சென்னை வாழ் மக்கள் அரசுக்கும், மாணவ செல்வங்களுக்காகவும் செய்ய வேண்டியது, மின்சார சிக்கனம். இதை எப்படி தொடங்கலாம், இப்படியும் 
1.தயவுசெய்து இன்வெர்ட்டர்களில் சார்ஜை நிரப்பி மின்வெட்டை சமாளிக்காதீர்கள்
2.ஏர் கண்டிஷன்களை உபயோகப்படுத்துவது தற்காலிமாக நிறுத்தி வைக்கலாமே
3.தேவையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறையை அனைப்பதில் தொடங்கி, குண்டு பல்ப்பை மாற்றுவது வரை நாம் பல யூனிட் மின்சாரத்தை சேமிக்கலாமே
4. வழக்கமாக வீட்டிற்கு கட்டும் மின்தொகையில் 3 ல் 1 பங்கு, இல்லையா 2 பங்கு நீங்கள் கட்டினாலும் அது உங்களின் பங்களிப்பை காட்டும்.
பாலிதீன்களில் பைகளில் குப்பையை நிரப்பி சாக்கடை ஓடும் கால்வாய்களில் எறிந்துவிட்டு சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டவுடன் குய்யோ முய்யோ என கத்துவதும், வீட்டின் முன்புற ரோட்டில் தண்ணீர் தேங்கும்போது விட்டுவிட்டு பின்பு அதில் பள்ளம் விழும்போது கவுன்சிலரிடம் கம்ப்ளெய்ட் பண்ணுவதுமான நம் மக்களின் வாழ்வியல் நெறிமுறைகளில் மாற்றம் வந்தால்தான் ஆளும் அரசும் நம்மீது அன்பு கொள்ளும். அந்த மாற்றம் மின்சார சிக்கனத்தில் இருந்து ஆரம்பிக்கலாமே!

ஜமாஅத்தினர் விண்ணப்பம் செய்க

Wednesday, February 15, 2012  at 7:17 PM;
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கப்படாமல் இருக்கும் பள்ளிவாசல்,கபரஸ்தான்,தர்காகளுக்கு உடனே பட்டா வழங்க தமிழக அரசு உத்தரவு…
தாய்ச்சபையின் தன்நலமில்லா தியாகப்பணிக்கு மேலும் ஓர் சான்று.. அல்ஹம்துலில்லா
நன்றி:லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.காம்.
http://www.lalpetexpress.com/?p=5418

எம்.எல்.ஏ காயம்

Wednesday, February 8, 2012  at 9:18 AM;


காட்டுமன்னார்கோவில் அருகே கார் கவிழ்ந்து நடந்த விபத்தில் அதிமுக எம்எல்ஏ முருகுமாறன் காயத்துடன் தப்பினார்கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதி அதிமுக எம்எல்ஏ முருகுமாறன். இவர், ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சேத்தியாதோப்புக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வானமாதேவி என்ற இடத்தில் சென்ற போது திடீரென்று சாலையின் குறுக்கு முதியவர் ஒருவர் சென்றுள்ளார்

முதியவர் மீது மோதாமல் இருக்க காரை சாலையின் ஓரமாக டிரைவர் இறக்கியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் கவிழ்ந்ததுகாரில் இருந்த எம்எல்ஏ முருகுமாறன், காட்டுமன்னார்கோவில் சேர்மன் மணிகண்டன் ஆகியோருக்கு  காயம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சோழதரம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ரூ.250 கோடி இழப்பு

Monday, February 6, 2012  at 9:26 AM;
கடலூர் மாவட்டத்தில் பெருவாரியான பகுதிகளில் சம்பா பருவத்தில் நெல் பயிரிடப்படுகிறது. இவ்வாண்டு காவிரி டெல்டா பாசனப் பகுதியான 1.5 லட்சம் ஏக்கர் உள்ளிட்ட 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் பயிரிடப்பட்டு இருந்தது. மேட்டூர் அணை முன் கூட்டியே திறக்கப்பட்டதால் டெல்டா விவசாயிகள் நடவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். விளைச்சல் அமோகமாக இருக்கும் என்றும் எதிர்பார்த்த நிலையில், புயல் வடிவில்  அவர்களது வாழ்வில் விதி விளையாடிவிட்டது.
நன்கு விளைந்திருந்த நெல் மணிகளை, புயல் வாரிச் சென்றுவிட்டது. பூக்கும் நிலையில், பால் பிடிக்கும் நிலையில் இருந்த நெற்பயிர்களை சேதப்படுத்தி, பதராக மாற்றிவிட்டது. ஜனவரி 18-ம் தேதிக்கு மேல், நெல் அறுவடை தொடங்கியது. ஆனால் மகசூலோ விவசாயிகளை ஏமாற்றம் அடையச் செய்துவிட்டது.
வடவாறு பாசனப் பகுதிகள் (11 ஆயிரம் ஏக்கர்) மற்றும் வடக்கு ராஜன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் (27 ஆயிரம் ஏக்கர்) பெரும்பாலும் அறுவடை முடிந்துவிட்டது. ஆனால் இவற்றில் 60 சதவீத மகசூல் தான் கிடைத்ததாக விவசாயிகள் கூறுகின்றனர். வீராணம் பாசனப் பகுதிகளில் (50 ஆயிரம் ஏக்கர்) 50 சதம் அறுவடை முடிந்துவிட்டது.  இதில் 40 சதவீதம்தான் மகசூல் என்கிறார்கள்  விவசாயிகள்.  
கடைமடைப் பகுதிகளில் (50 ஆயிரம் ஏக்கர்) 10 நாள்களில் அறுவடை தொடங்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அப்பகுதிகளில் அறுவடைக்கான கூலியை கொடுக்கக் கூட நெல் கிடைக்குமா என்ற அச்சத்தால், அறுவடை செய்யாமல் அப்படியே  விட்டுவிடலாமா என்று எண்ணுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.  டெல்டா அல்லாத பகுதிகளில் சுமார் 70 ஆயிரம் ஏக்கரில் இப்போது அறுவடை நடக்கிறது. அங்கும் மகசூல் 50 சதம்தான் என்கிறார்கள் விவசாயிகள்.
கொள்முதலும் குறைவு: கடலூர் மாவட்டத்தில் 125 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, ஜனவரி 10-ம் தேதி முதல் கொள்முதல் நடந்து வருகிறது. ஆனால் சனிக்கிழமை வரை 17,960 டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் 1.19 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதில் பாதி அளவுக்கு கூட கொள்முதல் செய்ய முடியுமா என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.  
கடலூர் மாவட்டத்தில் சுமார் 2.5 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்படுகிறது. இதில் சராசரியாக ஏக்கருக்கு 2,100 கிலோ நெல் கிடைக்கிறது. 2.5 லட்சம் ஏக்கரில் கிடைக்கும் நெல்லின் குறைந்தபட்ச மதிப்பு ரூ.495.6 கோடி. இவ்வாண்டு 50 சதம் மகசூல் பாதிப்பு என்று எடுத்துக் கொண்டாலும், இந்த ஆண்டு சம்பா நெல் விசாயிகளுக்கு புயலால் ஏற்பட்ட இழப்பு ரூ.250 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள் விவசாயிகள்.
அரசு நிவாரணம் ரூ.120 கோடி: புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் விவசாயிகள் அனைவருக்கும் அரசு அளித்துள்ள நிவாரணத் தொகை ரூ.120 கோடி. 1.80 லட்சம் ஏக்கரில் நெற்பயிர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் நெல் விவசாயிகளின் ரூ.250 கோடி இழப்புக்கு, அரசு வழங்கும் இழப்பீடு வெறும் 72 கோடி ரூபாய் தான். இது தவிர பயிர் காப்பீட்டு நிறுவனம் மூலமும் பதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது.
 கடலூர் மாவட்டத்தில் 1.70 லட்சம் நெல் விவசாயிகளில் 8 ஆயிரம் பேர் மட்டுமே பயிர் காப்பீடு செய்து உள்ளனர். இவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை இழப்பீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நெல் விவசாயிகளின் முழு பாதிப்பையும் யாராலும் ஈடுசெய்ய இயலாது. கடலூர் மாவட்டத்தில் இயற்கைச் சீற்றம் ஆண்டுதோறும் நிகழ்கிறது. எனவே அனைவரும் பயிர் காப்பீடு செய்வதன் மூலமே 80 சதவீதம் வரை இழப்பை ஈடுசெய்ய முடியும் என்கிறார், மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.ரவீந்திரன்.
பயிர் காப்பீட்டுத் தொகையில் 11.90 சதம் பிரீமியம் செலுத்த வேண்டும். இதில் 6.90 சதத்தை மத்திய, மாநில அரசுகள் செலுத்துகின்றன. மீதம் 5 சதத்துக்கு விவசாயிகள ஏக்கருக்கு குறைந்தது ரூ.357 செலுத்தினால் போதும். இதிலும் ஒரு பகுதியை அரசு ஏற்றுக் கொண்டு, அனைத்து விவசாயிகளையும் பயிர் காப்பீடு செய்ய வைப்பதன் மூலமே, நெல் விவசாயத்தைக் கப்பாற்ற முடியும் என்றார் அவர்.

நன்றி:தினமணி

மின்தடை நேரம் மாற்றம்

Wednesday, February 1, 2012  at 5:21 PM;
சிதம்பரம் கோட்டத்துக்கு உள்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் 2 மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படும் நேரம் பிப்ரவரி 1-ம் தேதி முதல் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என செயற்பொறியாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சிதம்பரம் நகரம் நடராஜா மின்னூட்டி மூலம் மின்சாரம் பெறும் பகுதிகள்
காலை 6 முதல் 8 மணி வரை, டூரிசம் மின்னூட்டி மூலம் மின்சாரம் பெறும் பகுதிகள்- மாலை 4 முதல் 6 மணி வரை. அண்ணாமலை நகர், மாரியப்பாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்- மதியம் 12 முதல் 2 மணி வரை. அம்மாபேட்டை, மணலூர், வண்டிகேட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்- மதியம் 2 முதல் 4 மணி வரை. காட்டுமன்னார்கோவில் நகரம், லால்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்- காலை 6 முதல் 8 மணி வரை. புவனகிரி, கீரப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்- காலை 10 முதல் 12 மணி வரை. பரங்கிப்பேட்டை, பு.முட்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்- மாலை 4 முதல் 6 மணி வரை. ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்- காலை 10 முதல் 12 மணி வரை.
நன்றி:தினமணி

படம் பார்த்து கவிதை சொல்லல்

Wednesday, January 25, 2012  at 11:13 PM;
பெருவெளியை நீலமாக கொண்ட பூளோகத்தில் சீன
பெரும் சுவற்றின் கோடாய் மாறுவேனோ

சமவெளி பாலைவனத்தில் மலைபோல் எழுந்து நிற்கும்
கிரேக்க பிரமிடாய் எழுவேனோ

நீக்கமற நிறைந்திருக்கும் காடுகளுக்கு நடுவே ஓடும்
அமேசான் ஆறுபோல் நடப்பேனோ

பசிபிக் பெருங்கடலின் மர்ம முக்கோணம்
பெர்முடா போல் ஆழ்ந்து போவேனோ

சாய்கோபுரமாய் சாய்வேனோ, நயாகரவாய் வீழ்வேனோ
இமயமலையாய் உருகுவேனோ, கங்கையை போல் பாய்வேனோ

தட்டையான பார்வையில் தனித்துவமாய் தெரிபவை
தவிக்க முடியதாவையாக  ஆகி போகிறது

பிரமாண்டங்களை மனிதமனம் உவமையாக்குகிறது
பிரமிக்கும் கைவண்ணங்களை உள்வாங்கிகொள்கிறது

நிலை கண்ணாடியாய் நிலைநிறுத்தபட்ட வெள்ளை காகிதத்தில்
மனித மனம் கட்டவிழ்கிறது

உயிர்ப்பின் உந்துதலால் அது தனித்து எழுகிறது
வீழ்வது எழுவதெற்கேயாயினும் கை விட்டபாடில்லை

என்னுள் ஒருவன் எவன் அவன் என காணகிடைத்தேன்
காட்சி பிழையோ என என் நிழல் படைத்தேன்

குட்டியாய் இருந்தபோது கட்டிய குச்சியில் இன்றும் கட்டப்படும் யானை
போலன்றோ தட்டையாய் இருந்திருக்கிறேன் நிழலையும் காணாது

பற்றுதல் துறக்கும் நேரத்தில் படைப்பின் நோக்கம் தெரிகிறது
கைபற்றுதல் காண என் நெஞ்சம் அலைபாய்கிறது.

மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும்
காற்று விடுவதில்லை என மாசேதுங் சொன்னது இதைதானோ?

புயலால் இடம்பெயர்ந்த பறவைகள்

Tuesday, January 24, 2012  at 12:32 AM;
கடலூர், ஜன. 22:  "தானே' புயல் கடலூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான வீடுகளைச் சிதைத்து, மக்களைப் புகலிடம் இன்றி தவிக்க விட்டதைப்போல், மரங்கள் அனைத்தையும் சிதைத்து பறவைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி விட்டது.
பறவைகளுக்கு புயல் நிவாரணம் வழங்க எந்த அரசால் முடியும்? எனவே அவை கடலூர் மாவட்டத்தை விட்டே இடம் பெயர்ந்து சென்றுவிட்டன." தானே' புயலில் கடலூர் மாவட்டத்தில் 3.5 லட்சம் வீடுகளுக்கு மேல் சேதம் அடைந்தன. வீடுகளின் கூரைகள் பலவும் காணாமல் போய்விட்டன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் புகலிடம் இன்றி தவித்தனர்.
அரசு புயல் நிவாரணம் வழங்கி, மக்களின் துயரத்தை ஓரளவேனும் துடைத்து இருக்கிறது.   மரங்கள்தான் பறவைகளின் வாழ்விடங்கள். பகல் நேரங்களில் இரைத்தேடி வானில் சிறகடித்து அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தாலும், இரவில் பாதுகாப்பு கருதியும், கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யவும், ஏதேனும் மரக்கிளைகளைத்தான் அவை தஞ்சம் அடைகின்றன.
புயலில் கடலூர் மாவட்டத்தில் 2 கோடி மரங்களுக்கு மேல் சாய்ந்து விழுந்து, விறகாகி விட்டன. இதனால் பறவைகளின் புகலிடங்களும், புயலுக்குப் பலியாகி விட்டன. இந்நிலையில்,  "தானே' புயல் தாக்கத்தையும் தாங்கி, கிளைகளை இலைகளை இழந்து நிற்கும் சில மொட்டை மரங்கள்தான் இன்று, பறவைகளின் சரணாலயங்களாக மிஞ்சி நிற்கின்றன.
மொட்டை மரங்களில் பகலில் பறவைகளுக்கு நிழலும் இல்லை, இரவில் கடும் குளிரில் இருந்து பாதுகாப்பும் இல்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.மொட்டை மரங்கள் எந்த அளவுக்கு பறவைகள் கூடுகட்ட வசதியாக இருக்கும் என்று தெரியவில்லை. புயலில் கடலூரில் ஏராளமான பறவைகள் இறந்தும், கூடுகள் சிதைந்தும் இருக்கக் கூடும் என்றும், புயலுக்குப் பின் புகலிடம் இன்றியும், இனப்பெருக்கம் செய்வதற்கு வசதியாக கூடுகள் கட்ட மரங்கள் கிடைக்காமலும், பிற மாவட்டங்களுக்கு அவை இடம் பெயர்ந்து சென்று விட்டதாகவும் பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் எந்த சூழ்நிலையிலும் வாழும் சக்தி கொண்ட காகங்களைத்தான் இப்போது மாவட்டத்தில் எங்கும் பார்க்க முடிகிறது. மற்ற பறவைகளை பெரும்பாலும் பார்க்க முடியவில்லை
நன்றி:தினமணி

தானே புயலும் கடலூர் மாவட்டமும்.

Saturday, January 21, 2012  at 10:36 AM;
ந்த தானேப் புயல் காற்றின் வேகம் இன்னும் சில கி.மீட்டர்கள் கூடி இருந்தால்... கடலூரே இருந்திருக்காது. மழையும் வெள்ளமும் இன்னும் கொஞ்சம் வலுத்திருந்தால், கடலுக்குள் போயிருக்கும் கடலூர். விபரீதங்களைக் கொஞ்சம் கூடுதலாகவே யோசித்தால்தான்... செயல் செய்தாக முடியும்!
 கன்னியாகுமரியை இன்று தெற்கு என்கிறோம். ஆனால், குமரி மலையும் பஃறுளி ஆறும் அதையும் தாண்டி இருந்தது என்பதற்கு சிலப்பதிகாரக் குறிப்பு இருக்கிறது. அந்தக் கண்ணகி காதை அரங்கேறிய பூம்புகார், இப்போது கடலுக்குள் எங்கோ இருக்கிறது. தனுஷ்கோடி தரை இழந்துபோனது 50 ஆண்டுகளுக்கு முந்தைய இழப்பு. இப்போது அப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டு, தலை தப்பி நிற்கிறது கடலூர்!
 தென்பெண்ணை ஆற்றின் கரையில் 1,300 உயிர் அற்ற உடல்களை வரிசையாகப் புதைத்த சுனாமி கொடுமையை ஆறு ஆண்டுகளுக்கு முன் கண்ணீருடன் அனுபவித்த கடலூருக்கு, மீண்டும் இந்தச் சோகம். உயிர்ச் சேதங்கள் சுனாமியில் அதிகம். 'தானே’ புயலில் பயிர்ச் சேதமே உச்சம். உயிர்ச் சேதம் அதிக அளவில் இல்லாததாலேயே 'தானே’ தாண்டவத்தின் பேரழிவை யாரும் உணரவில்லை!


புதுச்சேரியில் இருந்து கடலூரை நோக்கிச் செல்ல... கிருமாம்பாக்கத்தைத் தொடும்போதே அழிவின் அடையாளங்கள் தெரிந்துவிடுகின்றன. புதுச்சேரியில் இருந்து விழுப்புரம்... சிதம்பரத்தில் இருந்து விக்கிரவாண்டி... இந்தப் பகுதிகளுக்கு இடைப்பட்ட கிராமங்களின் அனைத்துத் தோப்புகளிலும் காற்றின் தப்புத் தாளங்கள் நடந்து முடிந்துவிட்டன. டிசம்பர் 29-ம் தேதி நள்ளிரவு 'செத்தோம்டா சாமி’ என்று முடக்கப்பட்டார்கள் நடுத்திட்டு, தியாகவல்லி, புலியூர், காடாம்புலியூர், பத்திரக்கோட்டை, புதுப்பாளையம் என்று வரிசையாக நீளும் ஏராளமான ஊர் மக்கள். ஆனால், அவர்களே இன்று 'செத்திருக்கலாமே சாமி’ என்ற சோகத்தோடு நடைப் பிணமாகக் காட்சி தருகிறார்கள்!
முந்திரியும் பலாவும், வாழையும் கரும்பும், பருத்தியும் வரகும், தேங்காயும் மாங்காயும், வெற்றிலையும் பூஞ்செடிகளும்... என எதை விட்டுவைத்தார்கள் கடலூர் சுற்றுவாசிகள்? எல்லாவற்றையும் தந்தார்கள். இங்கு மட்டும் அல்ல... தேசம் முழுமைக்கும். பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஆந்திரா வழியாகக் கடந்த ஆண்டு மட்டும் 1,000 லோடு பலா போயிருக்கிறது. கடலூர் முந்திரி போகாத நாடே இல்லை. கடந்த பருவத்தில் மட்டும் 20 கோடிக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். ''பண்ருட்டி பலானு இதுவரை நீங்க ருசிச்சது இனிமே கிடையாது சார்!'' என்கிறார் கீழமாம்பட்டுக்காரர்.
 ''20 வருஷமா முந்திரி ஏற்றுமதி செய்தவன் நான். இனி, என் மகன்கூட அதைச் செய்ய முடியாது. பேரன்தான் செய்ய முடியும்!'' என்று கலங்குகிறார் பத்திரக்கோட்டைக்காரர். அதாவது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் 'எதிர்காலம் இல்லை’ என்ற கொடும் தண்டனை அந்த விவசாயிகளுக்கு விதிக்கப்பட்டுவிட்டது. இத்தனை ஆண்டுகள் பார்க்காத சோகம் இது!


நெல் பயிரிட்டு இருப்பார்கள். மழையும் வெள்ளமும் கூடுதலாகி, பயிரையே மூழ்கடித்து அழுகவைத்து, விவசாயியை அழவைக்கும். போட்ட முதலும் போய், வர வேண்டிய வருமானமும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் விவசாயிக்கு அரசாங்கம் தரும் இழப்பீடு, கொஞ்சம் மூச்சுவிட வழி வகுக்கும். ஆறு மாதங்களில் அடுத்த பருவம் வரும். மீண்டும் நெல் பயிரிட்டு, விட்ட சந்தோஷத்தை எட்ட வாய்ப்பு கிடைக்கும். டெல்டா மாவட்டங்கள் அடிக்கடி சந்திக்கும் அவலம் இது. ஆனால், முந்திரியின் கதை அப்படி அல்ல!
முந்திரி வைத்தால் 5 ஆண்டுகள் கழித்துத்தான் பூ பிடிக்கும். 8 ஆண்டுகளில் மெள்ள வளரும். 15 ஆண்டுகள் கழித்துத்தான் ஒரு முந்திரி மரம் முழு வளர்ச்சியை எட்டும். பலா மரங்களுக்கும் இதே கதை தான். 20-30 ஆண்டு மரங்கள்தான் கொத்துக் கொத்தாகப் பலாப் பழங்களைக் கொடுக்கும். 'இது 40 வருஷ மரங்க’, 'இது 75 வருஷ மரங்க...’ என்று காட்டுகிறார்கள். மாளிப்பட்டு என்ற இடத்தில் 100 வருஷ மரத்தைப் பார்த்தோம். ''எங்க அப்பாவுக்கு 88 வயசு. அவரு சின்னப்பிள்ளையா இருக்கும்போதுதான் இந்த மரத்துல லேசா பூ விட்டுச்சாம்!'' என்கிறார் விவசாயி கருணாகரன். இந்த மரத்தின் கொப்பும் கிளையும் காற்றால் ஒடித்து எறியப்பட்டு உள்ளது. இனி, ஒருவர் மரத்தை வைத்து... மூன்று தலைமுறை தாண்டி... பலா கொடுக்குமா?


பலா, முந்திரி மரப் பலகைகள் வாங்க ஒரு வாரம், பத்து நாள் என ஆட்கள் அலைவார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த மக்கள் வெட்டித் தர மாட்டார் கள். இந்த நிலைமை அப்படியே மாறி விட்டது. வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கிப்போட்ட மரங்களை... ஆசை ஆசையாக வளர்த்தவர்களே கட்டிங் மெஷின் வைத்து வெட்டும் காட்சிகளை அதிகமாகப் பார்க்க முடிகிறது. இந்த மரங்களை எடுத்துச் செல்லவும் யாரும் தயாராக இல்லை. ''கும்பகோணத்துல ஒருத்தர் கேட்கிறாரு. நாங்கதான் கொண்டுபோய்க் கொடுக்கணுமாம். வண்டி வெச்சுக் கொண்டு போற வசதி இல்லை. அதனால அப்படியே கிடக்கட்டும்னு போட்டுட்டோம்'' என்கி றார் மாளிப்பட்டுக்காரர்.
இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி, வேரை விலக்கி சுத்தப்படுத்தி... பலாவோ, முந்திரியோ வைக்க நிலத்தைத் தயார் ஆக்குவதற்கே ஒவ்வொரு விவசாயிக்கும் பல ஆயிரம் வேண்டும். கையில் கொஞ்சம் பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே அதைச் செய்யத் தயார். மற்றவர்கள் விரக்தியின் உச்சத்தில்! ''முந்திரியும் பலாவும் செழிக்க ஆரம்பிச்ச பிறகுதான், இந்த ஆளுங்க வட்டிக்குக் கடன் வாங்குற பழக்கத்தை விட்டாங்க. திரும்பவும் கடன் வாழ்க்கைக்கு கொண்டுவிட்ருச்சு தானே புயல்!'' என்று அழுகிறார்கள். முந்திரியை ஒட்டித்தான் இவர்களது மொத்தப் பொருளாதாரமும் இருந்துள்ளது. 'பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கலயா?’ என்றால், 'முந்திரி உடைச்ச உடனே பார்த்திட வேண்டியதுதான்’ என்பதுதான் பெரும்பாலும் பதிலாக இருக் கும்! 'ஹாஸ்டல் ஃபீஸ் கட்டணும்பா!’ என்ற மகனின் கோரிக்கைக்கும் முந்திரிதான் உடைபட வேண்டும். முந்திரியை மொத்தமாக எடுத்த பிறகு, கீழே விழுந்துகிடப்பதை எடுக்க மாட்டார்கள். அதைப் பொறுக்குவதற்கு என்றே ஏழை மக்கள் ஏராளமாகக் கூடிவிடுவார்கள். இதைக் கடையில் போட்டாலே கணிசமான பணம் கிடைக்குமாம். இதுக்கு 'தப்புக் கொட்டை பொறுக்குறது’ என்று பெயர். இனி, சாதாரண மக்களுக்கு மட்டும் அல்ல... பெரும் தோப்பு வைத்திருந்தவர்களுக்கு தப்புக் கொட்டைக்கும்கூட வழி இல்லை.

முந்திரி, பலா கொடுத்த பணச் செழிப்பு அந்தப் பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்குக் காரணமாக அமைந்தது. கடந்த பல ஆண்டுகளாக சமூக மோதல்கள் குறைந்ததற்குக்கூட அது காரணமாக இருக் கலாம். இப்போது அடைந்துள்ள வீழ்ச்சி, அதை நோக்கி மீண்டும் திரும்புவதாகவும் போய்விடக் கூடும். கடன், மேலும் கடன், வட்டி, அதீத வட்டி ஆகி மீள முடியாத நிதி நெருக்கடியை உருவாக்கும். முதல் தலைமுறையாகப் படிக்க வந்த பிள்ளைகள், தங்களது எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடுமோ என்ற அச்சத் தில் இருக்கிறார்கள். பெண்களின் நிலை இன்னமும் அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளது. எல்லாவற்றுக்கும் சர்வரோக நிவாரணியாக 'டாஸ்மாக்’ மாறி வருகிறதோ என்று யோசிக்க வைத்தன, இந்தக் கிராமங் களில் நாம் பார்த்த காட்சிகள். அரசாங்கம் கொடுத்த நிவாரணத் தொகை... கவலையை மறக்க மட்டுமே பயன்படுகிறது. வாழ்க்கையை நினைக்க நினைக்க... அவர்களுக்குப் பெரும் பயம் பிடித்துக்கொள்கிறது. திருமணங்கள் பல தடைபட்டு நிற்கின்றன. குத்தகைக்காரர்களிடம் முன்பணம் வாங்கிச் செலவு செய்தவர்கள் முழி பிதுங்கி நிற்கிறார்கள். 
 நிலத்தை நம்பிக் கடன் கொடுத்தவர்களால் கேட்கவும் முடியவில்லை... கேட்காமல் இருக்கவும் முடியவில்லை. கூரை வேயப் பணம் இல்லை. யாரிடமும் கேட்கவும் முடியவில்லை. மரங்களுக்கு இணையாக மின் கம்பங்களும் விழுந்து நொறுங்கியதால் மின்சாரம் இல்லவே இல்லை. 10 நாட்களாக இருட்டு வாழ்க்கை. குடிக்கத் தண்ணீர் இல்லை. மீனவர்களுக்குப் படகுகள் போய்விட்டன. சிறு விவசாயிகள் மாடு, ஆடு, கோழி இழந்து நிற்கிறார்கள். மொத்தத்தில் புயல் இன்னமும் கரையைக் கடக்கவில்லை; திருப்பித் திருப்பிப் போட்டு அடித்துக்கொண்டே இருக்கப்போகிறது இன்னும் 20 ஆண்டுகளுக்கு!
 
 

தானே புயல் சேத விபரம்

Saturday, January 7, 2012  at 11:35 PM;
தானே புயலால் கடலூர் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.  15 அமைச்சர்கள் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரண பணிகளை கவனித்து வருகின்றனர். ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு முழுமையான இயல்பு வாழ்க்கை திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் புயல் ஏற்படுத்திய சேதம் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. புயல் பாதித்ததுமே தகவல் தொடர்புகள் முற்றிலும் துண்டித்து விட்டதால் ஒவ்வொரு இடத்திலும் ஏற்பட்ட பாதிப்புகள் உடனடியாக வெளியே தெரியவில்லை. இப்போது தான் முழுமையாக தகவல் தொடர்பு கிடைத்துள்ளன.

மின்சார துறையில் மட்டும் ரூ.1400 கோடி சேதம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார். அரசு துறை சேதம் மற்றும் தனிப்பட்ட நபர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் அனைத்தையும் கணக்கிட்டு பார்த்தால் கடலூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 60 சதவீதத் துக்கு மேற்பட்ட மரங்கள் கீழே விழுந்துவிட்டன. இவற்றில் பல மரங்கள் நூற்றாண்டு காலமாக இருந்தவை. எந்த புயலாக இருந்தாலும் புளிய மரம் தாங்கிக்கொள்ளும் என்று சொல்வார்கள். ஆனால் ராட்சத புளிய மரங்கள் கூட வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. முந்திரி, பலா, தென்னை மரங்கள் பெரும்பாலும் விழுந்துவிட்டது.

ஆங்காங்கே ஒருசில மரங்களை மட்டுமே காணமுடிகிறது.   மாவட்டம் முழுவதும் கடலோர தாலுகாக்களை சேர்ந்த அனைத்து கிராமங்களிலும் குடிசை வீடுகளை காணவில்லை. அதே போல ஓட்டு வீடுகளும் முற்றிலுமாக சாய்ந்து விட்டன. காங்கிரீட் வீடுகளில் கூட ஜன்னல்கள், கதவுகள் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன.

கடலூரில் சிப்காட் தொழிற்பேட்டையில் பெரும்பாலான தொழிற்சாலைகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. இதேபோல மாவட்டத்தில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்களும் இயங்க முடியாத அளவுக்கு பாதிப்படைந்துள்ளன. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது கடலூர் மாவட்டத்தில் 2500 வீடுகள் சேதம் அடைந்திருந்தன. 950 கால்நடைகள் உயிரிழந்தன.

5 ஆயிரம் சிறுபடகுகள், 300 எந்திர படகுகள் பாதிக்கப்பட்டன. 1200 ஹெக்டேர் விவசாய பயிர்கள் சேதமடைந்தன. ஆனால் புயல் பாதிப்பு இதை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. மாவட்டம் முழுவதும் 90 ஆயிரம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் அழிந்துள்ளன. 2 லட்சம் குடும்பங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்த தென்னை, பலா, முந்திரி மரங்கள் நாசமாகி விட்டதால் விவசாயிகள் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது. இதேபோல நெல் பயிர், கரும்பு ஆகியவையும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் சுனாமியை விட தானே புயலுக்கு உயிரிழப்பு குறைவாக இருந்தது.

எனவே பாதிப்பு பற்றிய விவரங்கள் வெளியிடங்களுக்கு அதிகமாக தெரியவில்லை.   சுனாமி பாதித்த போது மாநிலம் முழுவதுமிருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் உடனடியாக களமிறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் இப்போது ஒரு சில தொண்டு நிறுவனங்கள் மட்டுமே நிவாரண பணிகளை செய்து வருகின்றனர். 

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகள் இன்னும் கிடைக்கவில்லை. அரசு கொடுக்கும் உதவிகள் மட்டும் ஆங்காங்கே கிடைத்து வருகிறது. தொண்டு நிறுவனங்கள் ஓரளவு உதவி செய்தால் தான் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வு பழைய நிலைக்கு திரும்பும் நிலை இருக்கிறது. பெரும்பாலான கிராமங்களில் மக்கள் வீடுகளை இழந்து கட்டாந் தரையையே வீடாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஓட்டு வீடுகளை சீரமைக்க ஓடுகளோ, அதற்கான மரங்களோ கிடைக்கவில்லை. கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் கரும்பு சோகை, தென்னை ஓலை வைத்தே குடிசை வீடுகளை அமைத்திருப்பார்கள். வீடுகளை மீண்டும் கட்ட இவை கூட கிடைக்கவில்லை. இதனால் மக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள். வீடுகளில் விழுந்த பல வீடுகளில் ராட்சத மரங்கள் விழுந்து கிடக்கின்றன.

அவற்றை அகற்றுவதற்கு ஜே.சி.பி. போன்ற எந்திரங்கள் வந்தால் தான் முடியும். அந்த எந்திரங்கள் கிடைக்காததால் மரங்கள் அப்படியே கிடக்கின்றன. புயல் காற்றின் போது மழையும் சேர்ந்து பெய்ததால் பல வீடுகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. இதனால் உடுத்துவதற்கு துணி இல்லாமலும், சாப்பிடுவதற்கு உணவு பொருட்கள் இல்லாமலும் பலர் அவதிப்படுகின்றனர். 

நிலைகுலைந்த கடலூர் மாவட்டம்

  at 11:25 PM;
ஆந்திரா போய்விடும் என நினைத்த புயல் கடலூர் மாவட்டம் மற்றும் புதுவையில், மக்களின் வாழ்வாதாரங்களை துடைத்தெறிந்துவிட்டது. சாலையோர மரங்களிலிருந்து வீட்டின் மேல் வைத்த ப்ளாஸ்டிக் தண்ணீர் டேங் வரை காற்றில் பறந்துவிட்டபோது, குடிசை வீடுகளும், முக்கனி விளையும் மரங்களும், வயல்வெளிகளின் நெற்கதிர்களும் சாய்வது எம்மாந்திரம். ஈடுசெய்ய முடியாத இழப்பை இன்று நம் மாவட்டம் கண்டிருக்கிறது.

நெல்வயல்களுக்கு ஏக்கருக்கு 20,000 ரூபாயும், வாழை நிலங்களுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாயும், கரும்புக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாயும், தென்னைக்கு ஏக்கருக்கு 10,000 யும் நிவாரணமாக வழங்க மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். முந்திரி மற்றும் பலா விளைவிக்கவே இன்னும் 7 ஆண்டுகள் ஆகும் எனும்போது அவர்களுக்கு அரசு இதைவிட பெரியதாக ஏதாவது நிவாரணம் வழங்கினால்தான் அவர்கள் வாழவே முடியும். கடலூர் மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவித்து மாநில அரசும், மத்திய சர்காரும் நிதி வழங்கினால் மட்டுமே, மக்களின் வாழ்க்கை சராசரி நிலையை அடையும்.

இயற்கை நடத்திய கோரதாண்டவம் புகைபடங்களாக கடலூர்மாவட்ட செய்திகளில்